வழிபாடு

ஆடி கிருத்திகை: வடபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2024-07-29 04:25 GMT   |   Update On 2024-07-29 04:25 GMT
  • வடபழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
  • முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

போரூர்:

ஆடி கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இன்று அதிகாலை 3மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு பின்னர் பள்ளியறை பூஜை முடிந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

இதையடுத்து அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 11 மணி வரை முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நண்பகல் 12 மணி வரை சந்தனகாப்பு அலங்காரத்திலும், அதைத்தொடர்ந்து மாலை 4 மணி வரை ராஜ அலங்காரமும், பின்னர் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்துடனும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

பக்தர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் ஆங்காங்கே குடி தண்ணீர் வசதி, முதியோர், கைக்குழந்தையுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை என பல்வேறு வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோவில் வளாகத்தை சுற்றியும் கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News