வழிபாடு

கல்ப விருட்ச வாகனத்தில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்தபோது எடுத்த படம்.

நாராயணவனம், அப்பலாயகுண்டாவில் கல்யாண, பிரசன்ன வெங்கடேஸ்வரர் கல்ப விருட்ச வாகனங்களில் வீதிஉலா

Published On 2023-06-04 04:21 GMT   |   Update On 2023-06-04 04:21 GMT
  • உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
  • இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது.

திருப்பதி மாவட்டம் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், 'ராஜகோபாலசாமி' அலங்காரத்தில் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகனத்துக்கு முன்னால் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. பக்தர்கள் பக்தி, பஜனை பாடல்களை பாடியபடி சென்றனர். அதைத்தொடர்ந்து காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது.

அதேபோல் அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வரர், 'ராஜமன்னார்' அலங்காரத்தில் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதன் பிறகு உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 4 மணிக்கு கல்யாணோற்சவம் நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பிரசன்ன வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags:    

Similar News