வழிபாடு

அவினாசிலிங்கேசுவரர் கருணாம்பிகை அம்மன் கோவில்.

அவினாசிலிங்கேசுவரர் கோவில் கும்பாபிஷேக பணி தொடங்குவது எப்போது?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-11-19 05:09 GMT   |   Update On 2022-11-19 05:09 GMT
  • முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.
  • இந்த கோவிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அவினாசியில் உள்ள பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற தலமாகவும், முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம்பாடி உயிருடன் மீட்டெடுத்த வரலாற்று சிறப்புமிக்க தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் அவினாசியப்பருக்கு ஏழுநிலை ராஜகோபுரமும், கருணாம்பிகை அம்மனுக்கு ஐந்து நிலை கோபுரமும் கலைநயத்துடன் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3-வது பெரிய தேரான அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 14 ஆண்டுகளுக்கு மேலானதால் கோவில் கோபுரங்கள் பொலிவிழந்து காணப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் பராமரிப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

எனவே கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறையினருக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த ஜூலை மாதம் கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தி கும்பாபிஷேக ஏற்பாடுகள் விரைந்து செய்வதென முடிவு செய்தனர். ஆனால் பல மாதங்களாகியும் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெறாதது வருத்தமளிக்கிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

இதுபோல் அவினாசி-மங்கலம் ரோட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆகாசராயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் ராயம்பாளையம் மற்றும் கருணைபாளையம் கிராமங்களில் இருந்து தாரைதப்பட்டை முழங்க பக்தர்கள் அழகிய மண்குதிரைகளுடன்வந்து கோவிலில் வைத்து வழிபடுவார்கள். மேலும் ஏராளமானோர் தங்களது குழந்தைகளுக்கு இங்கு முடி எடுத்து காதுகுத்தி கிடாய் வெட்டி விசேஷம் செய்வதும் ஆண்டாண்டாக நடந்துவருகிறது.

இக்கோவில் பல பகுதிகளில் பழுதடைந்தும் சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டு, சாய்ந்த நிலையிலும் உள்ளது. இந்தகோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் இக்கோவில் திருப்பணிகள் செய்து இதற்கும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாக தரப்பில் கூறுகையில் கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பி அனுமதி கேட்கப்பட்டு அதற்கு அரசிடம் இருந்து அனுமதியும் கிடைத்துள்ளது. இருப்பினும் அவினாசிலிங்கேசுவரர் கோவில் பராமரிப்பு பணிகள் மற்றும் கும்பாபிஷேக பணிகளுக்கு செலவினம் அதிகம் தேவைப்படுவதால் உபயதாரர்களுக்காக எதிர்பார்ப்பில் உள்ளது. விரைவில் கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

Similar News