வழிபாடு

நாளை மகாளயபட்சம் தொடக்கம்: முன்னோரை நினைத்தால் முன்னேறலாம்

Published On 2024-09-17 09:19 GMT   |   Update On 2024-09-17 09:19 GMT
  • மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
  • முன்னோர்கள் ஆசி வழங்க பிதுர் உலகத்தில் இருந்து பூலோகம் வருகின்றனர்.

மகாவிஷ்ணு ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு லோகத்துக்கு சென்று அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் புரட்டாசி மாதம் அவர் பித்ரு லோகத்துக்கு வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் பித்ருக்கள் அனைவரும் பாத பூஜை, ஹோமம் உள்ளிட்டவைகளை செய்வார்கள். ஏனெனில் பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.

புரட்டாசி மாதம் பித்ருக்கள் செய்யும் பூஜை மற்றும் ஆராதனைகளை மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். பித்ருக்கள் நடத்தும் அந்த பூஜைக்கு "திலஸ்மார நிர்மால்ய தரிசன பூஜை" என்று பெயர்.

திலம் என்றார் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்கு நடத்தப்படும் பூஜை திலஸ்மார நிர்மால்ய பூஜை என்றழைக்கப்படுகிறது.

இந்த பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும் எள் தானியம் நிறைந்த நிலையில் பித்ருக்களுக்கு காட்சியளிப்பார். இது பித்ருக்களை தவிர வேறு யாருக்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.

விஷ்ணுவின் நிர்மால்ய தரிசனம் பெறும் பித்ருக்களுக்கு அரிய பலன்கள் கிடைக்கும். இந்த அரிய பலன் களை பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும் அவர் களது உறவினர்கள் பெற மகா விஷ்ணு அருள்வார்.

பித்ருக்களின் ஆராதனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மகா விஷ்ணு, பித்ருக்களிடம், "15 நாட்கள் நீங்கள் பூலோகத்துக்கு சென்று உங்கள் குடும்பத்தினர் தரும் அன்னத்தை ஏற்று வாருங்கள்.

உங்கள் குடும்பத்தினருக்கு நிர்மால்ய பலன்களை கொடுத்து வாருங்கள்" என்று அனுப்பி வைப்பார்.

இதைத் தொடர்ந்தே பித்ருக்கள் புரட்டாசி மாதம் 15 நாட்கள் பூலோகத்தில் உள்ள நம் வீட்டுக்கு வருகிறார்கள். இந்த 15 நாட்களைத்தான் நாம் மகாளயபட்சம் என்று சொல்கிறோம்.

மகாளய பட்சம் என்னும் முன்னோர் வழிபாட்டுக்கான 15 நாட்கள் நாளை (18-ந்தேதி) தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதியில் முடிகிறது. இந்த நாட்களில் முன்னோரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

மகாளயபட்சத்தில் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்க பிதுர் உலகத்தில் இருந்து பூலோகம் வருகின்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்து உள்ளம், உடல் தூய்மையுடன் நாம் காத்திருக்க வேண்டும். வீட்டையும் சுத்தமாக வைக்க வேண்டும். குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்வது கூடாது.


இந்த காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவது இல்லை. ஏனெனில் முன்னோருக்கான திதி, தர்ப்பணம், சிரார்த்தம், தானம், தர்மம் செய்வதில் ஈடுபட வேண்டும் என்பதற்காக. கன்னியாகுமரி, ராமேசுவரம், வேதாரண்யம், தனுஷ்கோடி போன்ற கடற்கரை கோவில்களுக்கு செல்லலாம்.

முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்து காகத்திற்கு அன்னமிடலாம். பசுவிற்கு கீரை, பழம் கொடுக்கலாம். இதுவும் முடியாவிட்டால் முன்னோர்களின் பெயரை உச்சரித்து 'காசி காசி' என்று சொல்லியபடியே, கால் மிதிபடாமல் வீட்டு வாசலில் எள், தண்ணீர் விட்டாலும் பலன் கிடைக்கும்.

மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 15 நாட்களும் நாம் பித்ருக்களை ஆராதித்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

பூலோகத்தில் தங்கி இருக்கும் 15 நாட்களில் கோவில் தீர்த்தங்களில் உள்ள தெய்வீக சக்திகளை பித்ருக்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் நாம் பித்ருக்களுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்யும்போது, பித்ருக்கள் மிகவும் மனம் குளிர்ந்து அந்த தெய்வ சக்திகளை நமக்கு கொஞ்சம் பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள்.

மகாளயபட்ச 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலன்களையும், ஆத்மசக்தியையும் கொடுக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.

ஆக நாம் செய்யும் பித்ரு தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த 15 நாட்களில் மகாளயபட்ச வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் கிடையாது. எல்லாமே உங்கள் இஷ்டம்தான்.

உங்கள் குல வழக்கப்படி தர்ப்பண வழிபாடுகளை எப்படி கொடுப்பார்களோ.... அந்த வழக்கப்படியே செய்யலாம். தர்ப்பணம், சிரார்த்தம் கொடுப்பதில் சாதி, மத, குல பேதங்கள் எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ருக்களை தேடி வரும். அந்த ஆசீர்வாதத்தை பித்ருக்களும் நம்மிடம் நேரடியாக எடுத்து வரக்கூடும்.

எனவே மகாளயபட்ச நாட்களில் பித்ருக்களை வழிபாடு செய்து, விஷ்ணுவின் அருளை பெற தவறாதீர்கள்.

மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மூன்றிலும் அதிக புண்ணியத்தை தருவது மகாளய அமாவாசை ஆகும்.

இந்த 15 நாட்களில் வரும் ஒவ்வொரு திதியும், ஒவ்வொரு வகை பித்ருக்களுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. அந்த திதி சிறப்பு நாட்களை பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட திதியில் குறிப்பிட்டவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முழுமையான பலன்களை பெற முடியும்.

அன்று நீங்கள் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும், அவர்களை மனம் குளிரச் செய்யும். அவர்களை மேலும் சாந்தி அடையச் செய்யும். தர்ப்பணத்தை வீட்டில் வைத்தும் கொடுக்கலாம். ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீருங்கள்.


மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமானோர் நீராடி பித்ரு பூஜை செய்து, தமது மூதாதையர்களை வழிபடுவார்கள்.

மகாளய பட்ச நாட்களில் தினமும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும் என்று கருட புராணம், விஷ்ணு புராணங்களில் கூறப்பட்டுள்ளது. முடியாதவர்கள் காகத்திற்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு அகத்தி கீரை வாங்கிக் கொடுக்கலாம்.

தர்ப்பணம் கொடுக்காவிட்டால் பித்ருக்கள் மனம் வருந்த நேரிடும். ஏனெனில் எந்த பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறதோ, அந்த பித்ருக்களுக்குத்தான் தாகம் தீர்ந்து, ஆத்ம சக்தி அதிகமாக கிடைக்கும்.

வாழும் காலத்தில் நாம் நம் முன்னோர்களிடம் அன்புடன் இருந்திருக்கலாம். அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். சிலர் பெற்றோரை கடைசி காலத்தில் தவிக்க விட்டிருக்கலாம்.

அந்த பாவத்துக்கு பரிகாரமாக, மகாளயபட்ச 15 நாட்களும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. எனவே மகாளய பட்ச 15 நாட்களும் மூதாதையர்களை ஆராதியுங்கள். யார் ஒருவர், பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறாரோ, அவருக்கு பித்ருக்கள் தெய்வ சக்திகளை பரிசாக தந்து விட்டுச்செல்வார்கள். முன்னேற்றம் தானாக வரும்!

Tags:    

Similar News