வழிபாடு

உலக வாழ்வை காக்கும் முருகனின் அருள்

Published On 2023-02-28 06:34 GMT   |   Update On 2023-02-28 06:34 GMT
  • முருக வழிபாடு தமிழகத்தில் அதிகமாக உள்ளது.
  • கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் கலியுக கடவுளாக உள்ளார்.

உலக வாழ்வில் மனிதன் எவ்வளவோ பாவங்கள் செய்து வருகிறான். இதில் மனிதனை நெறிப்படுத்தி ஆன்ம ஞானத்தை அடைய வழிவகை செய்வது தெய்வ வழிபாடு. இதில் முருக வழிபாடு தமிழகத்தில் அதிகமாக உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் முருகனை தங்கள் குலதெய்வமாக எண்ணி வழிபடுகின்றனர். ஏனெனில் உண்மையான பேச்சுக்கும், மொழிக்கும் துணையாக இருப்பது முருகனின் திருநாமங்கள். கர்மவினைகளுக்கு ஆட்பட்டு உலக வாழ்க்கையில் அல்லல்படுவதில் இருந்து காப்பது முருகனின் பன்னிரு புயங்கள் என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.

ஆறுமுகனின் வேலும், திருக்கையும் துணையாக நின்று எம பயத்தை போக்கக்கூடியது.அதர்மத்தை அழித்து அருளையும், பொருளையும் கொடுக்க கூடியது. முருகன், சித்தர்களுக்கு எல்லாம் தலைவனாகியதால் சித்தனாதன் என பெயர் பெற்றார். போகர் என்ற சித்தர் வடிவமைத்த நவபாஷாண சிலையே பழனி மலைக்கோவிலில் மூலவராக உள்ளது. சூரபத்மனின் ஆணவத்தை அழித்து, இரு கூறாக்கி அதில் ஒன்றை மயிலாக்கி மற்றொன்றை சேவலாக்கினார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியிலும் வைத்துக் கொண்டார். இதன் காரணமாகத்தான் தன் தலைவனை காண மயில்கள் பழனி மலையை சுற்றிலும் ஆங்காங்கே நடனமாடி உலா வருகின்றனவோ.. என்று எண்ணும் வகையில் ஆங்காங்கே மயில்களை காண முடியும்.

முருகனின் ஆறுமுகங்கள் தான் மனிதர்களின் ஆறு சக்கரங்களையும் சுழல வைத்து உடலை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகிறது. தனது சக்தியெனும் அருளால் பக்தர்களிடம் தீயசக்திகள் நெருங்காமல் முருகப்பெருமான் காக்கின்றார். மாறா இளமையுடன் பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கிய செந்தமிழ்வேலன், பக்தர்களின் அறைகூவலுக்கு, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் கலியுக கடவுளாக உள்ளார்

Tags:    

Similar News