வழிபாடு
null

நலம் தரும் நவ துர்க்கைகள்!

Published On 2024-10-25 02:59 GMT   |   Update On 2024-10-25 06:20 GMT
  • தீய செயல்களை அழிக்கும் தெய்வமாக குறிப்பிடப்படுபவள் துர்க்கை அம்மன்.
  • வன துர்க்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்திலும் பிரசித்தம்.

தீய செயல்களை அழிக்கும் தெய்வமாக புராணங்களில் குறிப்பிடப்படுபவள், துர்க்கை அம்மன். இந்த அன்னையை ஒன்பது வகை துர்க்கையாக பிரித்து வழிபடுபவர்களும் இருக்கிறார்கள்.

வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, லவண துர்க்கை, தீப துர்க்கை, ஆசுரி துர்க்கை ஆகியோரே, 'நவ துர்க்கை' என்று அழைக்கப்படுகின்றனர்.


வன துர்க்கை:

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் 'கொற்றவை' என்ற பெயரால் குறிப்பிடப்பட்டவள் வனதுர்க்கை. அகத்திய முனிவரும், ராவணனும் இந்த தேவியை வழிபட்டதாக கூறப்படுகிறது.

ராவணனை வதைத்திடும் வல்லமையைப் பெறுவதற்காக, அகத்தியரின் ஆலோசனைப்படி ராமபிரான் இந்த துர்க்கையை வழிபட்டதாகவும் சொல்கிறார்கள்.

வன துர்க்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்திலும் பிரசித்தம். லலிதா சகஸ்ரநாமத்தில் 'மகாவித்யா' என்ற வரி வரும். அது வன துர்க்கையை குறிப்பிடுவதே ஆகும்.

தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கதிராமங்கலம், மயிலாடு துறைக்கு அருகில் உள்ள தருமபுரம் என அபூர்வமாகவே வன துர்க்கை கோவில்கள் காணப்படுகின்றன.


சூலினி துர்க்கை:

துர்க்கையின் வடிவங்களில் இவள் மிகவும் சக்தி படைத்தவள். சரபேஸ்வரரின் இறக்கை ஒன்றில் இவள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. சிவனின், உக்ரவடிவ தேவி இவள். திருவாரூர் மாவட்டம் பேரளம் எனும் ஊருக்கு அருகில் உள்ளது, அம்பர் மாகாளம் எனும் பாடல் பெற்ற தலம்.

இங்கே மாகாளி அன்னை, சூலினி துர்க்கையாக காட்சி தருகிறாள். இவளது திருமேனியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. ஒரு சிறிய கோலின் துணையாலேயே மாலை மற்றும் ஆடைகளை அணிவிக்கிறார்கள்.


ஜாதவேதோ துர்க்கை:

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவையே முருகனாக மாறின. நெற்றிக் கண்ணில் உருவான தீப்பொறிகளை ஏற்றுக் கொண்டு கங்கை நதியில் சேர்த்ததால் இந்த துர்க்கைக்கு 'ஜாதவேதோ துர்க்கை' என்று பெயர்.

யஜுர் வேதத்தில், துர்க்கா ஸுக்தம் என்ற பகுதி உண்டு. மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஸுக்தம் ஜாத வேதஸே என்றே தொடங்குகிறது.


சாந்தி துர்க்கை:

இறை வழிபாட்டால் விளையும் பயன்களில் மிகவும் சிறந்தது உள்ளத்துக்கு கிடைக்கும் அமைதியே ஆகும். 'ஓம் சாந்தி.. சாந்தி..' என்றே வேதங்களும் பிரார்த்திக்கின்றன. தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி வாழ்வில் சாந்தி நிலவச் வழிசெய்பவள் சாந்தி துர்க்கை என்று அழைக்கப்படுகிறாள்.


சபரி துர்க்கை:

ஒரு சமயம் சிவபெருமான் வேடுவன் உருவத்தைத் தாங்கியபோது, பார்வதி தேவி வேடுவப் பெண்ணாக வடிவம் கொண்டு அவருடன் வந்தாள். வேடுவச்சி உருவம் எடுத்த துர்க்கையையே, 'சபரி துர்க்கை' என்று அழைக்கிறார்கள்.


ஜ்வாலா துர்க்கை:

அன்னை ஆதிபராசக்தி பண்டாசுரன் என்ற அசுரனுடன் கடும்போர் புரிந்தபோது, மற்ற எதிரிகள் பார்வதி தேவிக்கு அருகில் வராமல் தடுப்பதற்காகத் துர்க்கை தேவி அக்னி ஜ்வாலையுடன் கூடிய மிகப்பெரிய நெருப்பு வட்டத்தை அமைத்தாள். இந்த செயலை செய்த துர்க்கை தேவியே, 'ஜ்வாலா துர்க்கை' எனப்படுகிறாள்.


லவண துர்க்கை:

ராமாயண காலத்தில் லவணாசுரன் என்றொரு அரசன் இருந்தான். அந்த அசுரனை அழிக்க புறப்பட்ட லட்சுமணன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு வழிபட்ட துர்க்கையே 'லவண துர்க்கை' ஆவாள். லவணாசுரன் அழிவதற்குக் காரணமாக இருந்ததால், இவள் லவண துர்க்கை எனப்பட்டாள்.


தீப துர்க்கை:

தீபமாகிய விளக்கு புற இருளை அகற்றி ஒளி வழங்குகிறது. பக்தர்களின் மனத்தில் இருக்கும் அஞ்ஞானம் என்னும் அக இருளை நீக்கி மெய் ஞானமான ஒளியை வழங்கும் தீபலட்சுமியே 'தீப துர்க்கை' என்று போற்றப்படுகிறாள்.


ஆசுரி துர்க்கை:

பக்தர்களிடம் உள்ள காமம் முதலான குணங்களை அழித்து மோட்சத்துக்கு அழைத்துச் செல்பவள், ஆசுரி துர்க்கை ஆவாள்.

Tags:    

Similar News