- படி திருவிழா 3 நாட்கள் நடக்கிறது.
- சுப்ரபாதம், தியானம் மற்றும் கூட்டுப் பஜனை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் தாச சாகித்ய திட்டத்தின் சார்பில் 3 நாட்கள் படி திருவிழா நடக்கிறது. முதல் நாளான நேற்று மாலை 4 மணியளவில் திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து 3-வது சத்திரம் வரை பஜனை மண்டல உறுப்பினர்கள் ஊர்வலம் (சோபா யாத்திரா) நடத்தினர். அதில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்திருந்த 3 ஆயிரம் பஜனை மண்டல உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு அலிபிரி பாத மண்டபத்தில் முக்கிய பிரமுகர்களுடன் படி பூஜை நடக்கிறது. அங்கிருந்து பஜனை மண்டல உறுப்பினர்கள் பாரம்பரிய பஜனைகள் செய்து பாத யாத்திரையாக சென்று திருமலையை அடைகிறார்கள்.
முன்னதாக 3-வது சத்திரம் வளாகத்தில் அதிகாலை 5 மணியில் இருந்து காலை 7 மணி வரை பஜனை மண்டல உறுப்பினர்கள் சுப்ரபாதம், தியானம் மற்றும் கூட்டுப் பஜனை நிகழ்ச்சிகள் நடத்தினர். அதைத்தொடர்ந்து காலை 8.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை பஜனை மண்டல உறுப்பினர்களுக்கு புதிய பாசுரங்கள், ஆன்மிக செய்திகள், மனித நேயத்துக்கான ஹரிதாசரின் உபதேசங்கள் நடந்தது.
மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளில் தாச சாகித்ய திட்ட சிறப்பு அலுவலர் ஆனந்த தீர்த்தாச்சாரிலு, திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் துணை அதிகாரி சாந்தி, பிற அதிகாரிகள் மற்றும் பஜனை மண்டல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.