வழிபாடு

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்: மூலவர் சிலையை பாதுகாத்து ஆராய சிறப்பு குழு

Published On 2022-10-14 05:50 GMT   |   Update On 2022-10-14 05:50 GMT
  • கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ளது.
  • கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கோவிலில் உள்ள மண்டபங்கள் தூய்மை செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள், கோபுரங்களில் வர்ணம் பூசும் பணிகள் ஆகியவை நடைபெறுகிறது.

இந்நிலையில் கோவில் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கும்பாபிஷேகத்தின்போது மூலவர் சிலையை பாதுகாத்திடவும், பலப்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும் ஆன்மிக பெரியோர்கள், ஓய்வுபெற்ற நீதியரசர், சிற்ப சாஸ்திரம் கற்று அறிந்த ஸ்தபதிகள், ஆகம வல்லுநர்கள், மக்கள் பிரதிநிதிகள் என 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதியரசர் பொங்கியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடம் குமரகுருபர சுவாமிகள், பழனி ஸ்தல அர்ச்சர்கள் பிரதிநிதி கும்பேஸ்வர குருக்கள், ஆகம வல்லுநர் செல்வசுப்பிரமணிய குருக்கள், பழனி திருமஞ்சன ஊழியர்கள் பிரதிநிதி பழனிசாமி, சென்னை தலைமை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, ஸ்தபதி செல்வநாதன், முதுகலை சித்த மருத்துவம் மற்றும் மாநில மருந்து உரிமம் வழங்கும் ஆணைய அலுவலர் பிச்சையாகுமார், திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, சென்னை அறநிலையத்துறை தலைமையிட இணை ஆணையர், பழனி கோவில் இணை ஆணையர் ஆகியோர் உள்ளனர்.

இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் பழனி முருகன் கோவில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கடந்த முறை பழனி கோவிலில் நடந்த கும்பாபிேஷகத்தின் போது மூலவர் சன்னதியில் உள்ள நவபாசான சிலை குறித்து சர்ச்சையான கருத்துகள் வெளிவந்தது. அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கும்பாபிஷேக பணிகளுக்கு முன்பாக சிலைக்கு மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் தேவஸ்தானம் சார்பில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி தொகையான ரூ.1 கோடியே 13 லட்சத்திற்கான காசோலையை இணை ஆணையர் நடராஜன், நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரியிடம் வழங்கினார்.

Tags:    

Similar News