வழிபாடு

திருப்பதியில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரிப்பு

Published On 2022-10-11 05:08 GMT   |   Update On 2022-10-11 05:08 GMT
  • புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
  • அதிகமாக குளிர்வாட்டுவதால் குழந்தைகள், முதியவர்கள் அவதியடைந்துள்ளனர்.

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா முடிந்ததும் அனைத்து தரிசனத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை.

கடந்த 5 நாட்களாக அதிகமாக இருந்த பக்தர்களின் கூட்டம் இன்று சற்று குறைந்து காணப்பட்டது.

இன்று காலை 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு சுமார் 20 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 5 முதல் 6 மணி நேரமும் ஆனது.

காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது திருப்பதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், பக்தர்கள் மழையில் நனைந்தபடி தரிசன வரிசையில் காத்திருந்தனர்.

அதிகமாக குளிர்வாட்டுவதால் குழந்தைகள், முதியவர்கள் அவதியடைந்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று 83,223 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 36,658 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.73 கோடி உண்டியல் வசூலானது.

Tags:    

Similar News