வழிபாடு

பிரதோஷ காலத்தில் வழிபட வேண்டிய பள்ளிகொண்டீஸ்வரர்

Published On 2024-07-03 13:04 GMT   |   Update On 2024-07-03 13:04 GMT
  • சுருட்டப்பள்ளி பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற சிறந்த தலம்.
  • இங்கு சயன கோலத்தில் காட்சி தரும் சிவனை தரிசிக்கலாம்.

சுருட்டப்பள்ளி:

பிரதோஷத்திற்கு பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் ஒன்று சுருட்டப்பள்ளி. இது ஆந்திரா-தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ளது.

சிவபெருமானை பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை சுருட்டப்பள்ளி திருத்தலத்தில் தரிசிக்கலாம். இத்தலம் உருவானதே பிரதோஷத்தை ஒட்டி தான். பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற தலம் என்பதை உணர்த்தும் வகையில் கோவிலின் எதிரே பெரிய நந்தி அமைந்துள்ளது.

துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தார் இந்திரன். அசுரர்கள் இந்திரனின் அரசை கைப்பற்றினர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெறவேண்டும் என தேவகுரு பிரகாஷ் பத்தி தெரிவித்தார். அதன்படி திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர்.

அப்போது வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தைக் கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து அதிலிருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என சிவபெருமானை வேண்டினர்.

சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்துவரும்படி கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி கொண்டு வந்து சிவபெருமானிடம் தந்தார். அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும், இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும், உலகமும் அழிந்துவிடும். எனவே இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எங்களைக் காத்திடுங்கள் என சிவனிடம் மன்றாடினர்.

உடனே சிவன் அந்தக் கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த பார்வதி தேவி, சிவனை தன் மடியில் கிடத்திக் கொண்டு சிவபெருமானின் வாயில் இருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கழுத்தின் பகுதியில் கைவைத்து அழுத்தினார். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. இதனால் அவர் நீலகண்டன் ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் அமுதாம்பிகை ஆனார். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார்.

அப்படி செல்லும் வழியில் சுருட்டப்பள்ளி தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணமும், ஸ்கந்த புராணமும் கூறுகிறது.

சிவன் பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்த இந்த அருட்காட்சியை இந்தியாவில் எந்த இடத்திலும் பார்க்க முடியாது.

சிவபெருமான் சுருட்டப்பள்ளி ஆலயத்தில் அம்மன் மடியில் படுத்தவாறு இருப்பதைப் பார்க்கலாம். இந்தத் தலத்தில் சுவாமி பள்ளி கொண்டிருப்பதால் பள்ளி கொண்டீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு மாதம் நடைபெறும் பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல சவுபாக்கிய செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கையாக இருக்கின்றது.

Tags:    

Similar News