வழிபாடு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடி உற்சவம் கோலாகலம்

Published On 2022-08-23 04:34 GMT   |   Update On 2022-08-23 04:34 GMT
  • பானை உடையும் போது கீழே சிதறும் பால், தயிர், வெண்ணெயை பிரசாதமாக எடுத்து சாப்பிட்டனர்.
  • உறியடி உற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. நேற்று மாலை உறியடி உற்சவம் நடைபெற்றது.

உறியடி உற்சவத்தையொட்டி நேற்று காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது. சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 9 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வந்தார். பின்னர் மாலை 3 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருச்சி விகையில் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பட்டு அம்மா மண்டபம் சாலையில் உள்ள யாதவ ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார்.

பின்னர் மாலை 7 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருச்சி விகையில் மற்றும் கிருஷ்ணன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் இரவு 8.15 மணியளவில் பாதாள கிருஷ்ணர் சன்னதி அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் உறியடி உற்சவம் கண்டருளினர்.

உறியடி உற்சவத்திற்காக நாலுகால் மண்டபத்தின் மேல் பூக்களால் அலக்கரிக்கப்பட்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அலங்கரிக்கப்பட்ட 3 பானைகளில் பால், தயிர், வெண்ணை நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணன் நாலுகால் மண்டபம் எதிரில் வந்தவுடன் கீழிருந்து நீண்ட குச்சியில் மூலம் அந்த பானைகள் உடைக்கப்பட்டு உறியடி உற்சவம் நடைபெற்றது.

இந்த உறியடி உற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் பானை உடையும் போது கீழே சிதறும் பால், தயிர், வெண்ணையை ஆகியவற்றை பிரசாதமாக எடுத்து சாப்பிட்டனர். பின்னர் அங்கிருந்து கிருஷ்ணன் மற்றும் நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தனர்.

Tags:    

Similar News