உள்ளூர் செய்திகள்

பவானிசாகரில் 15-ந்தேதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி-கடையடைப்பு போராட்டம்

Published On 2024-08-12 06:02 GMT   |   Update On 2024-08-12 06:02 GMT
  • இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட எதிர்ப்பு.
  • அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பவானிசாகர் பேரூராட்சி பகுதியில் ஏற்கனவே 420 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.

இதற்கிடையே மேலும் 120 வீடுகள் கட்டுவதற்காக பவானிசாகர் பேரூராட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பவானிசாகர் பகுதியில் உள்ள அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பவானி சாகர் மார்க்கெட் சதுக்கத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், 15 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பவானிசாகர் அண்ணா நகர் கடை வியாபாரிகள் சங்கம் அனைத்து வணிகர் சங்கம் மூத்த குடிமக்கள் சங்கம் கட்டிட பொறியாளர்கள் சங்கம் பொதுப்ப ணித்துறை ஊழியர்கள் சங்கம் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் பெரும்பா லும் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களில் 100 குடும்பங்கள் முதல் 300 குடும்பங்கள் வரை மட்டுமே உள்ளனர்.

ஆனால் பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ஆயிரம் குடும்பங்கள் உள்ளதால் இங்கு பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறுவதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுகிறது.

எனவே இப்போது உள்ள இலங்கை தமிழர் முகாமில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையை குறைத்து அவர்களை வேறு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை.

ஏற்கனவே இங்கு வகிக்கும் 420 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு கோழிப்பண்ணை பகுதியில் புதிதாக வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மீண்டும் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 120 வீடுகள் கட்ட அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இங்கு இலங்கை தமிழர் முகாமில் மக்கள் தொகை அதிகரித்துள்ள சூழ்நிலையில் இங்கு உள்ள முகாம் குடும்பங்களை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் பவானி சாகர் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 120 வீடுகள் கட்டுவதை தவிர்த்து திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

மேலும் தமிழகத்தின் மற்ற பகுதியில் உள்ளது போல் பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமில் உள்ள ஆயிரம் குடும்பங்களை 300 குடும்பங்களாக குறைக்க வேண்டும் என்பது எங்களின் முக்கிய கோரிக்கை ஆகும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்க உள்ளதோடு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News