செய்திகள்

விபத்தில் சிறுமி காயம்: வத்தலக்குண்டுவில் மறியல்-பதட்டம்

Published On 2018-02-02 11:26 GMT   |   Update On 2018-02-02 11:26 GMT
வத்தலக்குண்டு அருகே விபத்தில் சிறுமி காயமடைந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே கட்டகாமன்பட்டியை சேர்ந்த செல்லையா மகள் கார்த்திகா (வயது8). அதேபகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக கார்த்திகா திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது பெரியகுளத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட கார்த்திகா படுகாயமடைந்து மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நெடுஞ்சாலை ஓரம் பள்ளி உள்ளது. இதனால் அதிகளவு மாணவ-மாணவிகள் சாலையை கடந்து வருகின்றனர். எனவே இங்கு பேரிகார்டு அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும் என கிராமமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

எனவே தற்போது விபத்து நடந்துள்ளது. இதேபோல் கடந் சில மாதங்களுக்கு முன்பு சிறுவன் வேன் மோதி பலியானார். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காலை நேரம் என்பதால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர்  கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவம் குறித்து அறிந்ததும் நிலக்கோட்டை டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இருந்தபோதும் இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காணவேண்டும் எனக்கூறி தொடர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். #tamilnews

Tags:    

Similar News