செய்திகள்
திருட்டு

திருவள்ளூரில் அர்ச்சகர் வீட்டில் 22 பவுன் நகை திருட்டு

Published On 2021-10-30 13:08 GMT   |   Update On 2021-10-30 13:08 GMT
திருவள்ளூரில் அர்ச்சகர் வீட்டில் 22 பவுன் நகை திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் எம்.ஜி.எம் நகர் ஐஸ்வர்ய லட்சுமி தெருவை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் சத்தியநாராயணன் (வயது 28). இவர் திருவள்ளூரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு ஹேமா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஹேமா தனது குழந்தையுடன் கோயம்புத்தூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

அர்ச்சகரான சத்தியநாராயணன் நேற்று வழக்கம்போல கோவிலுக்கு சென்றார். மதியம் 2 மணி அளவில் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த கம்மல், வளையல், பிரேஸ்லெட், தங்கச்சங்கிலி என 22 பவுன் தங்க நகையும், 4 கிலோ வெள்ளி பொருட்களும் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகள் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News