உள்ளூர் செய்திகள்

கூடங்குளத்தில் மின் உற்பத்திக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் இந்தியா-ரஷ்யா இடையே ஒப்பந்தம்

Published On 2024-08-13 04:35 GMT   |   Update On 2024-08-13 04:35 GMT
  • 3 மற்றும் 4-வது அணு உலைகள் நிறுவப்பட்டு வருகிறது.
  • மின் உற்பத்திக்கு புதிய வகை எரிபொருட்கள் வினியோகம்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா ரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியுடன் அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தலா 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 1, 2 என மொத்தம் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது.

மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகள் நிறுவப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிவடைந்து அதன் மூலமும் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைக்கவும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது வரை முதல் 2 அணு உலைகளும் தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன.

இந்த 2 அணு உலைகளிலும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு அணு உலைக்கு 163 எரிகோல்கள் பொருத்தப்படும். இதில் 3-ல் 1 பங்கு எரிகோல்கள் ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்படும்.

இதற்காக மின் உற்பத்தி 2 மாதங்களுக்கு மேல் நிறுத்தப்படும். இதனால் எரிபொருள் மாற்றும் காலங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது.

இந்த எரிபொருளை இந்தியா-ரஷ்யா கூட்டு ஒப்பந்தத்தின்படி ரஷ்ய நிறுவனமான ரோஸாடாம் கூடங்குளத்திற்கு வினியோகம் செய்து வருகிறது.


இந்த எரிபொருளுக்கு மாற்றாக புதிய எரிபொருளை உற்பத்தி செய்யும் பணியை ரஷ்யாவின் ரோஸாடாம் நிறுவனத்தின் ஒரு அங்கமான 'டிவிஇஎல் ஜேஎஸ்சி' என்ற நிறுவனம் தொடங்கி உள்ளது. இதற்காக இந்தியா-ரஷ்யா இடையே ரூ.10 ஆயிரத்து 500 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய எரிபொருள் கூடங்குளத்தில் தற்போது அமைக்கப்பட்டு வரும் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3, 4 அணு உலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

3-வது அணு உலையை பொறுத்தவரை உட்புற அணு உலை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. நீராவி என்ஜின்கள், அணு உலை குளிர்விப்பான்கள் அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டது. 4-வது அணு உலையை பொறுத்தவரை உட்புற அணு உலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அணு உலை அழுத்த கலன்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்த 2 அணு உலைகளுக்கும் ரஷ்யாவின் ரோஸாடாமின் டிவிஇஎல் நிறுவனம் தயாரிக்கும் புதிய எரிபொருள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக ரோஸாடாம் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய எரிபொருள் மூலம் 18 மாதங்களுக்கு ஒரு முறை 3-ல் ஒரு பங்கு எரிகோல்களை மாற்றினால் போதுமானது. இதன் மூலம் மின் உற்பத்தியில் எந்த தடங்கலும் ஏற்படாது. அப்போது கூடுதல் காலங்கள் மின் உற்பத்தி செய்ய முடியும் என நம்பப்படுகிறது.

புதிய வகை எரிபொருள் மூலம் எரிபொருள் வாங்கும் செலவு குறைவதோடு மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெறும்.

3 ஆண்டுகளுக்கு 3 முறை இதுவரை எரிபொருள் மாற்றம் நடந்து வந்த நிலையில், இனி 3 ஆண்டுகளுக்கு 2 முறை என குறையும். அப்போது ஒரு முறை எரிபொருள் மாற்றும் செலவு மிச்சமாகும்.

கூடங்குளத்தில் இந்த 6 அணு உலைகளும் செயல்பட தொடங்கிவிட்டால் 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். அப்போது மின்தட்டுப்பாடு என்பது இருக்கவே இருக்காது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் 7 ஜிகா வாட்ஸ் அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. வருகிற 2029-ம் ஆண்டுக்குள் அதனை 13 ஜிகா வாட்சாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் முழு வீச்சில் இந்தியா அந்த பாதையை நோக்கி பயணித்து வருகிறது.

தற்போது புதிய வகை எரிபொருள் வழங்க உள்ள இந்த டிவிஇஎல் நிறுவனம் உலகம் முழுவதும் ஆசிய மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 14 நாடுகளுக்கு இந்த எரிபொருளை வழங்கி அதன் மூலம் ஆண்டுக்கு 400 பில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News