உள்ளூர் செய்திகள்

மயிலாப்பூர்-குமரன்நகரில் மின்சாரம் தாக்கி சிறுவன்-வாலிபர் பலி

Published On 2022-07-05 08:40 GMT   |   Update On 2022-07-05 08:40 GMT
  • மோட்டார் மூலமாக தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் பார்த்தசாரதி ஈடுபட்டிருந்தார்.
  • ஈரக்கையுடன் சுவட்சை போட்ட பாரத்தை மின்சாரம் தாக்கியது.

சென்னை:

சென்னை மயிலாப்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட டி.டி.கே. சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

இந்த பணியில் கண்ணகி நகரை சேர்ந்த பார்த்தசாரதி என்கிற 18 வயது வாலிபர் ஈடுபட்டிருந்தார். மோட்டார் மூலமாக தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் பார்த்தசாரதி ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் அவர் மயக்கமாகி சுய நினைவை இழந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்பு லன்சை வரவழைத்தனர். அதில் இருந்த மருத்துவ பணியாளர்கள் பார்த்தசாரதியின் உடலை பரிசோதித்தனர். இதில் அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இது பற்றி தகவல் அறிந்ததும் மயிலாப்பூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றொரு சம்பவம்...

சென்னை குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் பாரத். 9-ம் வகுப்பு படித்து வந்தான். வீட்டில் தனியாக இருந்த பாரத், கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டுவிட்டு குளித்துள்ளான்.

பின்னர் ஈரக்கையுடன் மின்சார சுவட்சை போட்டுள்ளார். இதில் பாரத்தை மின்சாரம் தாக்கியது. மயங்கி விழுந்த அவன் வீட்டுக்குள்ளேயே உயிருக்கு போராடி உள்ளான். அவனது முனகல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று மீட்டனர்.

பின்னர் கே.கே.நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவனின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக குமரன்நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News