உள்ளூர் செய்திகள்

மு.க.ஸ்டாலின் உரிய நேரத்தில் துணை முதலமைச்சர் பதவியை உதயநிதிக்கு கொடுப்பார்-செஞ்சி மஸ்தான்

Published On 2024-09-20 04:46 GMT   |   Update On 2024-09-20 04:46 GMT
  • மருதாசல அடிகளார் மடம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
  • வக்பு வாரிய திருத்த மசோதாவை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம்.

கோவை:

சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கோவையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளாரை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சந்தித்து கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-


பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் மடம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும், ஜமாத்தின் ஒருமித்த கருத்தும் இந்த வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உள்ளது.

மத நல்லிணக்கத்துக்கு வேற்றுமையில் ஒற்றுமை காணும் வேலையில் மத்திய அரசு இந்த சட்டம் மூலம் ஒற்றுமையில் வேற்றுமையை காண வேண்டும் என்ற நிலையே உருவாகி உள்ளது. இது கவலை அளிக்கிறது.


முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உரிய நேரத்தில் உள்ளாட்சித்துறையையும், துணை முதல்-அமைச்சர் பதவியையும் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார். அதேபோல அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் உரிய நேரத்தில் துணை முதல்-அமைச்சர் பதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கிறிஸ்தவ பாதிரியார்கள், அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் மதுக்கரை தாலுகா பகுதியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வசிப்பதாகவும், கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வசிப்பதாகவும் தெரிவித்த அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு கல்லறை அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News