உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டையில், சிறுவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுத்திருவிழா

Published On 2024-06-03 04:19 GMT   |   Update On 2024-06-03 04:19 GMT
  • பழைய கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.
  • சிறுவர், சிறுமிகளுக்கான கயிறு இழுத்தல் போட்டியும் நடந்தது.

பட்டுக்கோட்டை:

நமது பழமையான பள்ளிப்பருவ விளையாட்டுக்களை தற்போதுள்ள சிறுவர், சிறுமியர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாகவும், புதுப்பிக்கும் ஒரு முயற்சியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஆர்.வி. நகர் பகுதியில் கல்வியாளர்கள் ஒருங்கிணைப்புடன் சிறுவர், சிறுமியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர்.

இதில் பரமபதம், தாயம், பல்லாங்குழி, கிச்சுகிச்சு தாம்பலம், நொண்டி, நொங்கு வண்டி ஓட்டுதல், டயர் வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளையும் சிறுவர், சிறுமியர்கள் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகளுக்கான கயிறு இழுத்தல் போட்டியும் நடந்தது.

அதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்களும் தன்னார்வமாக நொங்கு வண்டி ஓட்டியும், டயர் வண்டி ஓட்டியும் பம்பரம் விளையாடியும் அவர்களது பழைய கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமியர்களின் பெற்றோர்களுக்கு கயிறு இழுத்தல் போட்டியும் நடந்தது. இது குறித்து சிறுமியர்கள் கூறுகையில், நாங்கள் விளையாட்டு என்றால் செல்போனிலும், டி.வியிவிலும் கேம் விளையாடிக் கொண்டிருப்போம். நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. இன்றைய தினம் பாரம்பரிய விளையாட்டுக்களை நாங்கள் மற்ற சிறுவர், சிறுமிகளுடன் இணைந்து விளையாடியது எங்களுக்கு ஜாலியாக இருக்கிறது. நாங்கள் மிகவும் சந்தோசமாக உள்ளோம்.

அம்மா அடிக்கடி வெளியில் சென்று ஓடியாடி விளையாட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு வாய்பே இல்லாமல் இருந்தது. தற்போது நாங்கள் மற்ற சிறுவர், சிறுமிகளுடன் இணைந்து ஓடியாடி விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News