உள்ளூர் செய்திகள்

நிபா வைரஸ் பரவல்: சோதனைச்சாவடிகளில் மருத்துவக்குழுவினர் ஆய்வு

Published On 2024-09-17 05:18 GMT   |   Update On 2024-09-17 05:18 GMT
  • 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதாரக்குழுவினர் கண்காணிப்பு.
  • 24 மணி நேர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

கோவை:

கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக வாலிபர் உயிரிழந்த நிலையில் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம்-கேரளா எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொது சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி கோவை-கேரளா எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறையினர் சிறப்பு தற்காலிக முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

கேரளாவில் இருந்து கோவைக்கு கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வருவோரிடம் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கேட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட சுகாதார அதிகாரி அருணா கூறுகையில், கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதாரக்குழுவினர் நியமிக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மேலும் அனைத்து அரசு தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News