உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் வரவேற்பை பெற்ற `போலீஸ் அக்கா திட்டம்': தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை

Published On 2024-09-04 07:35 GMT   |   Update On 2024-09-04 07:35 GMT
  • 71 கல்லூரிகளில் 2 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
  • போலீஸ் புரோ திட்டமும் கோவையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அண்மையில் கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் அடங்குவதற்கு கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு கல்லூரியில் வேலை பார்த்த தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும் அரங்கேறியது.

இப்படி தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் பெண்கள், மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை தடுப்பது தொடர்பாகவும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் மாவட்ட கலெக்டர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர்கள், போலீசார், கல்லூரி முதல்வர்கள் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர். அதில் முக்கியமாக கோவை மாநகர போலீசார் தாங்கள் செயல்படுத்தி வரும் போலீஸ் அக்கா திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், அது மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாகவும் மாநகர போலீஸ் சார்பில் அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கோவையில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதால், இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது.

கோவையில் கல்லூரி மாணவிகளிடம் வரவேற்பை பெற்ற போலீஸ் அக்கா திட்டம் பற்றிய விவரம் வருமாறு:-

கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உளவியல், பாலியல் ரீதியாக என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்களால் பெற்றோரிடமோ, கல்லூரி நிர்வாகம் என யாரிடமும் சொல்ல முடிவதில்லை. தயக்கத்தால் அதனை சொல்லாமல் தங்கள் மனதுக்குள்ளேயே போட்டு மூடி மறைத்து கொள்கின்றனர்.

இதனால் சில நேரங்களில் சிலர் தவறான முடிவுகளை எடுப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். அப்படி மாணவிகள் எந்த தவறான முடிவையும் எடுக்காமல் இருக்கவும், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டு தெரிவிப்பதற்காகவும் தொடங்கப்பட்டது தான் போலீஸ் அக்கா திட்டம்.

இந்த திட்டமானது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் பாலகிருஷ்ணன் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார்.

இந்த திட்டத்தில் போலீஸ்காரர் முதல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வரையிலான பெண் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு போலீஸ் அக்கா பணியில் இருப்பார்.

அவருக்கு என்று தனி அறை ஒதுக்கப்பட்டு இருக்கும். அத்துடன் கல்லூரியில் பணியில் இருக்கும் அந்த போலீஸ் அக்காவின் செல்போன் எண் கல்லூரி வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருக்கும்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி தொடங்கும் போது, அந்த கல்லூரியில் உள்ள போலீஸ் அக்காவை கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தி வைப்பார்கள். மேலும் போலீஸ் அக்காவின் செல்போன் எண்ணும் மாணவிகள் அனைவருக்கும் கொடுக்கப்படும்.

அந்த எண்ணை தொடர்பு மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்றும், அவர்களது விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படும்.

கோவை மாநகரில் உள்ள 71 கல்லூரிகளில் இந்த திட்டம் 2 வருடங்களுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கல்லூரிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் உள்ளடக்க புகார் கமிட்டி தான் இந்த திட்டத்தை தொடங்க உந்துதலாக இருந்ததாகவும், அவர்களுடன் இணைந்து போலீஸ் அக்கா பணியாற்றி வருகின்றனர் எனவும் கோவை மாநகர போலீசார் தெரிவித்தனர்.

இந்த திட்டத்தில் பணியாற்றி வரும் போலீஸ் அக்காவான பெண் போலீஸ் ஒரு சகோதரியை போல, மாணவிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவர்களிடம் கனிவுடன் பேசுவார்கள்.

இதன் மூலம் மாணவிகளுக்கும் போலீஸ் அக்கா மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு, ஆசிரியர்களிடம் தெரிவிக்க முடியாமல் இருக்கும் விஷயங்கள், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் கல்லூரிகளில் யாராவது பிரச்சினை செய்திருந்தால் அதனை மனம் விட்டு பெண் போலீசாரிடம் தெரிவிக்கின்றனர்.

பிரச்சினைகளை கேட்டதும் அந்த பெண் போலீஸ் அதனை சாதுர்யமாக கையாண்டு, மாணவியை அந்த பிரச்சினையில் இருந்து வெளியில் வர வைக்கின்றனர். இதன் மூலம் மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்படுகின்றன.

கோவை மாநகரில் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 473 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் அனைத்திற்கும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தகுந்த முறையில் தீர்வு கண்டுள்ளனர்.

இதுகுறித்து சென்னையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஒருவர் கூறும் போது, போலீஸ் அக்கா திட்டம் மாணவிகளுக்கு பாதுகாப்பான உணர்வையும், அவர்கள் பிரச்சினைககளில் இருந்து வெளிவருவதற்கான தீர்வை ஏற்படுத்தும் அமைப்பாகவும் உள்ளது என தெரிவித்தார்.

தற்போது இந்த திட்டத்தை தான் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் செயல்படுத்த மாவட்ட கலெக்டர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போலீசாருக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் தமிழகம் முழுவதும் போலீஸ் அக்கா திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த திட்டம் வருவதன் மூலம் மாணவிகள் தாங்கள் சொல்ல முடியாத பிரச்சினைகளை கூட போலீஸ் அக்காவிடம் தெரிவித்து தீர்வு காணமுடியும்.

இதேபோல் கல்லூரி மாணவர்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் போலீஸ் புரோ திட்டமும் கோவை மாநகரில் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News