மதுவில் ஊமத்தங்காய் கலந்து விற்றவருக்கு போலீசார் வலைவீச்சு
- போலீஸ் வருவதை அறிந்த இளங்கண்ணன் தப்பி ஓடிவிட்டார்.
- 150 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
தருமபுரி
தருமபுரி மாவட்டம் அரூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு மதுபானத்தை பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அரூர் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கினர். அப்போது தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எல்ல புடையாம்பட்டி அருகே உள்ள கெளாப் பாறை கிராமத்தைச் சேர்ந்த இளங்கண்ணன்( வயது 45 )வீட்டில் சோதனை செய்ய சென்ற போது போலீஸ் வருவதை அறிந்த இளங்கண்ணன் தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் போலீசார் இளங்கண்ணன் வீட்டை சோதனை செய்தபோது வீட்டின் பின்புறம் 19 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 150 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதில் சில பாட்டில்களில் மூடி திறக்கப்பட்டு இருந்தது. அந்த பாட்டில்களில் ஊம த்தங்காய் சாறை கலந்து விற்பனைக்கு வைத்தி ருப்பது தெரியவந்தது.
ஊமத்தங்காய் கலந்த மதுவை குடித்தால் குடிமகன்களுக்கு கூடுதல் போதை கிடைப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 150 மது பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளங்கண்ணனை தேடி வருகின்றனர்.