உள்ளூர் செய்திகள் (District)

கற்பக விநாயகருக்கு 18 படி பச்சரிசி கொழுக்கட்டை படையல்

Published On 2023-09-19 07:39 GMT   |   Update On 2023-09-19 07:39 GMT
  • கற்பக விநாயகருக்கு 18 படி பச்சரிசி கொழுக்கட்டை படையல் வைக்கப்பட்டது.
  • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலையில் தேரோட்டம் நடந்தது. பெரிய தேரில் கற்பக விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று காலை கற்பக விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மதியம் மூலவருக்கு கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்காக கோவில் மடப்பள்ளியில் 18 படி பச்சரிசியை கொண்டு பிரமாண்ட கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News