உள்ளூர் செய்திகள் (District)

விருதுநகர் சிட்கோ தொழிற்பேட்டையில் `திடீர்' தீ விபத்து

Published On 2024-09-25 04:10 GMT   |   Update On 2024-09-25 04:10 GMT
  • மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு பற்றி எரிந்தது.
  • தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

விருதுநகர்:

விருதுநகர் அழகாபுரி சாலையில் உள்ள சிட்கோ தொழிற் பேட்டையில் சிவ காசியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான பாலித்தீன் கவர் பிரிண்டிங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இங்கு 15-க்கும் மேற்பட்ட எந்திரங்கள் உள்ளன. சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் செயல்பாட்டில் இருந்த ஒரு எந்திரத்தில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு பற்றி எரிந்தது. அந்த எந்திரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பேரும், மற்ற தொழிலாளர்களும் தீயை அணைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் தப்பி வெளியேறினர். பின்னர் விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் அருகில் உள்ள ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற் சாலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் நிறுவனத்தில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த விபத்தில் பிரிண்டிங் எந்திரம், பாலித்தீன் கவர் ரோல்கள் மற்றும் பிரிண்டிங் மை கேன்கள், உபகரணங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

இந்த தீ விபத்து குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News