உள்ளூர் செய்திகள் (District)

பலத்த காற்று வீசுவதால் ராமேசுவரம், பாம்பனில் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்ல தடை

Published On 2023-04-30 04:52 GMT   |   Update On 2023-04-30 04:52 GMT
  • மீன்பிடி தடை காலத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
  • ராமேசுவரம், பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராமேசுவரம்:

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தையொட்டி உள்ள கடல் பகுதிகளில் 60 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக பகுதிகளில் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

மீன்பிடி தடை காலத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி ராமேசுவரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் வளிமண்டல அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் திசைமாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. மேலும் ராமேசுவரத்தையொட்டி உள்ள மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி ஆகிய கடல் பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

எனவே ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News