உள்ளூர் செய்திகள் (District)

நகைக்கடையில் போலி நகைகளை விற்று ரூ.2½ லட்சம் மோசடி- பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2024-03-02 10:23 GMT   |   Update On 2024-03-02 10:23 GMT
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • 2 பேரும் நகைக்கடையில் கொடுத்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர்.

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் ரபீஸ் ராஜா (வயது33). இவர் அங்கு நகைக்கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவரது நகைக்கடைக்கு பெண் ஒருவர், வாலிபரை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அவர்கள் சுமார் 78 கிராம் பழைய நகைகளை கொடுத்துவிட்டு 4 கிராம் கொண்ட ஒரு ஜோடி கம்மல் வாங்கி உள்ளனர்.

மீதமுள்ள நகைக்கு பதிலாக பணமாக ரூ.2.55 லட்சம் பணமாக பெற்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். மறுநாள் ரபீஸ் ராஜா அந்த 78 கிராம் பழைய நகைகளை உருக்கி உள்ளார். அப்போது அவை போலியான நகைகள் என்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து 2 பேரும் சேர்ந்து ஏமாற்றியதை அறிந்த கடை உரிமையாளர், கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்திய நிலையில், 2 பேரும் நகைக்கடையில் கொடுத்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் 2 பேரும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில், நகைக்கடையில் போலி நகைகளை கொடுத்துவிட்டு மோசடியில் ஈடுபட்டது ராஜபாளையம் சோமையா புரத்தை சேர்ந்த அன்னலெட்சுமி (வயது45), ஸ்ரீநாத் (29) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அன்னலட்சுமியிடம் இருந்து கம்மல் மற்றும் ரூ.2.½ லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News