உள்ளூர் செய்திகள்

குட்டி பிரிந்ததால் தாய் யானை தவிப்பு: டிரோன் மூலம் கண்காணிப்பு

Published On 2024-06-02 05:19 GMT   |   Update On 2024-06-02 05:19 GMT
  • குட்டி யானை சென்றதால் தாய் யானை தவிப்புக்கு உள்ளாகி உள்ளது.
  • டிரோன் காமிரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

வடவள்ளி:

கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் காட்டு யானை ஒன்று கண்டறியப்பட்டது. அதனுடன் குட்டி யானையும் இருந்தது.

உடல் நலம் பாதிக்க ப்பட்ட யானைக்கு கால்நடை மருத்துவக் குழு வினர், வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். நிற்க முடியாமல் அவதியடைந்த யானையை கிரேன் வாகனம் மூலம் தூக்கி நிறுத்தி சிகிச்சை அளித்து வந்தனர்.

தொடர் சிகிச்சையால் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் யானை சீராக உணவும் எடுத்து வருகிறது. யானையுடன் இருக்கும் குட்டி யானையையும் வனத்துறையினர் கண்காணித்து உணவளித்து வருகின்றனர்.

பெண் யானையின் உடல் நிலையில் முன்னே ற்றம் ஏற்பட்டுள்ளதால் அதனை வனத்திற்குள் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த 2 நாட்களாக தாய் யானையை சுற்றி, சுற்றி வந்த குட்டி யானை நேற்று திடீரென மாயமாகி விட்டது. குட்டி யானை சென்றதால் தாய் யானை தவிப்புக்கு உள்ளாகி உள்ளது.

தாய் யானை அருகே குட்டி யானை இல்லாததால் அதிர்ச்சியான வனத்துறையினர் வனப்பகுதியில் டிரோன் காமிரா மூலம் கண்காணித்தனர். அப்போது வனப்பகுதிக்குள் மற்றொரு ஆண் யானையுடன் நின்றிருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து குட்டி யானையை வனத்துறையினர் டிரோன் காமிரா மூலம் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

பெண் யானைக்கு மசாலா புல், ஆலை இலை, அரச இலை, பழங்கள் கொடுத்தோம். 150 முதல் 200 கிலோ வரை உணவு எடுத்துள்ளது. குட்டி யானையை 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை அழைத்து சென்றுள்ளது.

அந்த யானையின் நடமாட்டத்தை டிரோன் காமிரா மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பெண் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை வனத்திற்குள் விட திட்டமிட்டுள்ளோம்.

யானையின் உடல்நிலையை கண்காணிக்கவும், மற்ற யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் ட்ரேப் காமிரா பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News