தமிழ்நாடு (Tamil Nadu)

தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி வாலிபர் பலி

Published On 2024-09-13 08:31 GMT   |   Update On 2024-09-17 11:03 GMT
  • யானை நடமாட்டம் உள்ளதால் மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.
  • வனத்துறையினர் மற்றும் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வடவள்ளி:

கோவை மாவட்டம் நரசீபுரம், ஓணாப்பாளையம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதமாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது.

குடியிருப்புக்குள்புகும் யானை, வீடுகளை சேதப்படுத்துவது, தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது, மக்களை தாக்குவது என தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. யானை நடமாட்டம் உள்ளதால் மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.

தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் அருகே அட்டுக்கல் என்ற மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது34). இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை 7 மணிக்கு அவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள புளியந்தோப்பு என்ற பகுதிக்கு சென்றார்.

அப்போது அங்கு மறைந்திருந்த ஒற்றை யானை, தேவராஜை தாக்கி தூக்கி வீசியது. மேலும் காலால் மிதித்தும் கொன்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சத்தம் கேட்டு, மக்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் யானை அங்கிருந்து சென்று விட்டது. இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்தவரின் உடலை பார்வையிட்டு, அந்த பகுதியில் யானை நடமாட்டத்தையும் கண்காணித்தனர். மேலும் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News