உள்ளூர் செய்திகள்

களைகட்டிய சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா

Published On 2024-08-07 05:14 GMT   |   Update On 2024-08-07 05:14 GMT
  • ஆடிப்பண்டிகையை யொட்டி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
  • கோவிலை சுற்றி எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்.

சேலம்:

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா 22 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.



அதன்படி இந்தாண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 24-ந் தேதி கொடியேற்றுதல், 30-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் திருக்கல்யாணம் சக்தி அழைப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

திருவிழாவையொட்டி கோவில் வளாகம், கோவில் கோபுரங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைபவம், உருளுதண்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. இதையொட்டி சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று காலை முதலே கோவிலில் திரண்டனர்.


பின்னர் நேற்று முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய கோவில் சுற்றுப்பிரகாரத்தில் பொங்கல் வைத்தும், நேர்த்திக்கடனாக உருளு தண்டம் செலுத்தியும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

பொங்கல் நிகழ்ச்சி நாளை வரை நடைபெறுகிறது. இதையொட்டி இன்றும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு பொங்கலிட்டு வருகிறார்கள. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற உருளு தண்டம் செய்தும், கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தும் , அலகு குத்தியும் தங்களது நேர்ச்சை கடன்களை செலுத்தி வருகிறார்கள்.


8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு ஆடித்திருவிழாவில் உருளுதண்டம் நிகழ்ச்சி நடைபெற்றதால் குடும்பத்துடன் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு உருளுதண்டம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகிறார்கள்.

மேலும் நேற்றும், இன்று காலையும் தங்ககவசத்தில் அருள் பாலித்த அம்மனை ஏராளமான பக்ததர்கள் திரண்டு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலை சுற்றி எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. பக்தர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் கூழ், பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

வருகிற 10-ந் தேதி கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் விடுதல், 11-ந் இரவு 11.30 மணிக்கு சப்தாபரணம், 12-ந் தேதி மதியம் 1 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மாலையில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

ஆடித்திருவிழாவையொட்டி கோவிலில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபினபு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.


இதேபோல சேலம் மாநகரம் முழுவதும் அம்மன் கோவில்களில் திருவிழா நடைபெறுவதால் சேலம் மாநகரமே மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. மேலும் ஆட்டம் பாட்டத்துடன் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஆடிப்பண்டிகையை யொட்டி இன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதால் குடும்பத்துடன் பெரும்பாலனோர் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். 

Tags:    

Similar News