செய்திகள்

கேரள கன்னியாஸ்திரிக்கு நீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்தவர் கவலைக்கிடம்

Published On 2018-09-16 10:10 GMT   |   Update On 2018-09-16 10:10 GMT
கேரளாவில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நீதி கேட்டு கொச்சியில் 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். #Keralanun #StephenMathews
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயம், குருவிலங்காடு கன்னியர் மடத்தில் தங்கியிருந்த கன்னியாஸ்திரி ஒருவருக்கு ஜலந்தர் மறை மாவட்ட ஆயர் பிராங்கோ முல்லக்கல் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இப்புகார் தொடர்பாக கோட்டயம் போலீசார் ஜலந்தர் சென்று ஆயர் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரணை நடத்தினர். மேலும் வருகிற 19-ந்தேதி அவர், கோட்டயம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.

கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆயர் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக்கோரி கொச்சியில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி கிறிஸ்தவ கூட்டுசபையை சேர்ந்த ஸ்டீபன் மேத்யூ என்பவர் கொச்சி நகரில் நடத்திவந்த காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று ஒன்பதாவது நாளை எட்டிய நிலையில் அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமானது.

இதைதொடர்ந்து, அவர் வலுக்கட்டாயமாக உண்ணாவிரத மேடையில் இருந்து அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Keralanun #FrancoMulakkal #StephenMathews #hungerstrike
Tags:    

Similar News