இந்தியா (National)

ஒரு மாசம் தான் கெடு.. சாலையில் பள்ளம் இருக்கவே கூடாது.. டெல்லி முதல்வரின் டார்கெட்

Published On 2024-09-29 13:40 GMT   |   Update On 2024-09-29 13:40 GMT
  • டெல்லியில் சாலைகளின் தரம் உயர்த்தப்படும்.
  • உடைந்த சாலைகளால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

டெல்லி முதலமைச்சர் அதிஷி இன்று அமைச்சர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். டெல்லி தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறையினர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், வருகிற தீபாவளி பண்டிகைக்கு முன் டெல்லியில் சாலைகளின் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "மழையால் பல சாலைகள் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. டெல்லி ஜல் போர்டு, பி.எஸ்.இ.எஸ்., டாடா பவர் போன்ற ஏஜென்சிகள் அந்தந்த பணிகளை மேற்கொண்டாலும், அதன்பிறகு சாலைகள் சீரமைக்கப்படாத காரணத்தால் உடைந்த சாலைகளால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்."

"1,400 கி.மீ., பொதுப்பணித்துறை சாலைகள் முழுமையாக சேதமடைந்து, புனரமைப்பு தேவை, எந்தெந்த சாலைகள் 100-200 மீட்டருக்கு பகுதியளவு சேதமடைந்துள்ளன, எந்தெந்த சாலைகளில் சிறிய பள்ளங்கள் மட்டுமே உள்ளன, அவற்றை நிரப்ப வேண்டும் என விரிவான ஆய்வு நடத்தப்பட்டது."

"திங்கள் கிழமை முதல், டெல்லி அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் டெல்லியின் தெருக்களில் இருக்கும். நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பல்வேறு பகுதிகளுக்கு பொறுப்பேற்றுள்ளோம், அங்கு நாங்கள் நேரில் சாலைகளை ஆய்வு செய்து தேவையான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்."

"அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,400 கி.மீ. சாலைகளை சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதிக்குள், அதாவது தீபாவளி பண்டிகைக்குள், டெல்லி மக்களுக்கு தரமான சாலைகளை இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News