இந்தியா (National)

ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: சித்தராமையா சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

Published On 2024-09-25 04:29 GMT   |   Update On 2024-09-25 04:29 GMT
  • ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை.
  • நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.

பெங்களூரு:

கர்நாடகாவில் 'மூடா' நில முறைகேடு தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த கவர்னர், கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் அந்த மனு மீது விரிவாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனு நிராகரிக்கப்படுவதாகவும், கவர்னரின் உத்தரவு செல்லும் என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகு காணொலி மூலம் ஆஜராகி இருந்த சித்தராமையாவின் வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, இந்த தீர்ப்புக்கு 2 வாரங்கள் தடை விதிக்குமாறு கோரினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, நான் வழங்கிய தீர்ப்புக்கு நானே தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நேரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். தீர்ப்பு பற்றி தெரியவந்ததும் அவர் உடனடியாக தனது காவேரி இல்லத்துக்கு புறப்பட்டார். மேலும் மூத்த மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் சித்தராமையாவை சந்தித்து பேசினர்.

முதல்-மந்திரி சித்தராமையா ஐகோர்ட்டு தீர்ப்பு மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மந்திரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் மூத்த வக்கீல் அபிஷேக் மனுசிங்வியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலக கோரி எதிர்கட்சிகள் விலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி சித்தராமையா பா.ஜனதாவினர் சமூகநீதி, ஏழை மக்களுக்கு எதிரானவர்கள். அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்.

ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் நகலை நான் முழுமையாக வாசிக்கவில்லை. அதை படித்து பாா்த்த பிறகு நான் விரிவாக உங்களுடன் பேசுகிறேன். பா.ஜனதாவினர் எனக்கு எதிராகவும், எனது அரசுக்கு எதிராகவும் சதி செய்கிறார்கள்.

நான் எந்த தவறும் செய்யவில்லை. ஐகோர்ட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கிய காரணத்தால் நான் தவறு செய்துவிட்டேன் என்று அர்த்தம் இல்லை. ஐகோர்ட்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் 17ஏ பிரிவின்படி மட்டுமே விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. எனக்கு எதிராக முழு விசாரணைக்கு அனுமதி வழங்கவில்லை.

நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?. நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. இதை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். மத்திய மந்திரி குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அது நிலுவையில் உள்ளது. அவர் ராஜினாமா செய்துவிட்டாரா?. இது அவருக்கு பொருந்தாதா?. இதுகுறித்து அவரிடம் போய் கேளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News