இந்தியா

2 மணி நேரத்துக்கு ஒரு தடவை அறிக்கை- மம்தா அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

Published On 2024-08-19 02:35 GMT   |   Update On 2024-08-19 02:35 GMT
  • மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்.
  • டாக்டர்கள் போராட்டம் காரணமாக, சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

புதுடெல்லி:

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி என்ற அரசு ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு ஒரு பெண் டாக்டர் கடந்த 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையை சிபிஐயிடம் கொல்கத்தா ஐகோர்ட்டு ஒப்படைத்தது.

கடந்த 14-ம் தேதி நள்ளிரவு, ஒரு மர்ம கும்பல் புகுந்து ஆஸ்பத்திரியை சூறையாடியது.

இதற்கிடையே, பெண் டாக்டர் கொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்களின் 24 மணி நேர போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்தது. நேற்றுமுன்தினம் காலையில் இருந்து நேற்று காலைவரை போராட்டம் நடந்தது.

மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும், ஆஸ்பத்திரிகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த போராட்டம் காரணமாக, அனைத்து மாநிலங்களின் போலீஸ் துறைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் அனுப்பி வைத்தது.

அதில், உள்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

டாக்டர்கள் போராட்டம் காரணமாக, சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

இப்போது இருந்து 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை சட்டம்-ஒழுங்கு நிலவர அறிக்கையை டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறைக்கு பேக்ஸ் அல்லது இ-மெயில் அல்லது வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News