லாரி மீது வேன் மோதி திருப்பதி பக்தர்கள் 4 பேர் பலி
- பக்தர்கள் சென்ற வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக திடீரென மோதியது.
- 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டம் குடி பண்டா மற்றும் அமரபுரம் பகுதியை சேர்ந்த 14 பக்தர்கள் வாடகை வேனில் திருப்பதிக்கு வந்தனர்.
ஏழுமலையானை தரிசித்து விட்டு நேற்று இரவு வேனில் வீடு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். மடக சிரா, புல்ல சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்துகொண்டு இருந்தது. அப்போது சாலையோரம் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டு இருந்தது. பக்தர்கள் சென்ற வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக திடீரென மோதியது.
இதில் வேனில் இருந்த 4 பக்தர்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக இந்துபுரம் மற்றும் பெங்களூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.