மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. அணியை வீழ்த்தியது மும்பை
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 9 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது.
- அடுத்து பேட் செய்த மும்பை அணி 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
லக்னோ:
3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிய ஜார்ஜியா வோல் அரை சதம் அடித்து 55 ரன்களில் ஆட்டமிழந்தார். கிரேஸ் ஹாரிஸ் 28 ரன்னும், தீப்தி ஷம்ரா 27 ரன்னும் எடுத்தனர்.
மும்பை அணி அமெலியா கெர் 5 விக்கெட்டும், ஹெய்லி மேத்யூஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ஹெய்லி மேத்யூஸ் அரை சதம் கடந்து 68 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு ஹெய்லி மேத்யூஸ்-நட் சீவர் பிரண்ட் ஜோடி 92 ரன்கள் சேர்த்தது. நட் சீவர் பிரண்ட் 37 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், மும்பை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணியின் 4வது வெற்றி ஆகும்.