ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் என்பதா?- அணித் தேர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா
- வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சாளர்கள்.
- ஜடேஜா, அக்சார் படேல், வாஷிங்டன் சுந்தர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா வங்கதேசத்தை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டி தொடர்பாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்திய அணியில் ஜடேஜா, அக்சார் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி என ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனரே என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ரோகித் சர்மா பதில் அளித்தார். அப்போது கூறியதாவது:-
நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் (வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ்) மற்றும் மூன்று ஆல்-ரவுண்டர் சுழற்பந்து வீச்சாளர்களை (அக்சார் படேல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர்) ஆகியோரை கொண்டுள்ளோம். அக்சார் படேல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மிகப்பெரிய அளவில் பங்களிப்பை கொடுப்பார்கள்.
மற்ற பல அணிகள் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களை கொண்டுள்ளபோது, 6 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்கிறார்கள். அப்போது அதிக வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்கிறார்கள் என யாரும் சொல்வதில்லை. அது அவர்களுடைய பலம். நாங்கள் எங்களுடைய பலத்தின் மீது கவனம் செலுத்துவோம்.
ஒவ்வொரு ஐசிசி தொடரும் முக்கியமானது. டிராபியை வெல்ல நாம் பல்வேறு விசயங்களை செய்ய வேண்டும். சுப்மன் கில் கிளாஸ் பிளேயர். அவருடைய சாதனை மூர்க்கத்தனமானது. அதனால் அவர் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.