தென் ஆப்பிரிக்கா டி20 லீக்: எலிமினேட்டரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் வெளியேற்றம்
- முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 184 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 152 ரன்கள் எடுத்து தோற்றது.
கேப் டவுன்:
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடந்து வருகிறது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றனது.
இதில் நேற்று முன்தினம் நடந்த தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. கேப்டன் மார்கிரம் 40 பந்தில் 62 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எஸ்.ஏ.20 தொடரில் இருந்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது. ஆட்ட நாயகன் விருது மார்கிரமுக்கு வழங்கப்பட்டது.