கொங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி: ரேவந்த் ரெட்டி அறிவிப்பு
- இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி விருதை கொங்கடி திரிஷா பெற்றார்.
- அவர் இறுதிப்போட்டியில் 44 ரன்னும், தொடரில் 7 ஆட்டத்தில் 309 ரன்னும் எடுத்தார்.
ஐதராபாத்:
இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் மலேசியாவில் நடந்தது. இதில் கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்தது. இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருதை இந்தியாவின் தொடக்க வீராங்கனையான கொங்கடி திரிஷா பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் 44 ரன்களும், தொடரில் 7 ஆட்டத்தில் 309 ரன்களும் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில், ஜூனியர் டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெலுங்கானாவை சேர்ந்த கொங்கடி திரிஷா தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.
மேலும், இந்திய அணியில் இடம்பிடித்திருந்த மற்றொரு தெலுங்கானா வீராங்கனை துருதி கேசரி, அணியின் தலைமை பயிற்சியாளர் நவுஷீன் மற்றும் பயிற்சியாளர் ஷாலினி ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.