ஜூனியர் ஆசிய கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு தலா 2 லட்சம் பரிசு
- இறுதிப்போட்டியில் இந்தியா சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
- சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு தலா 2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது.
லீக் சுற்று முடிவில் சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் தென் கொரியாவை சீனா வீழ்த்தியது.
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின. முதல் பாதியில் சீனா 1-0 என முன்னிலை பெற்றது. போட்டியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது.
இதையடுத்து, ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் சீனாவை வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியை ஊக்குவிக்கும் வகையில் ஹாக்கி இந்தியா பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்த ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா ரூ.2 லட்சம் எனவும், சப்போர்ட் ஸ்டாப் அனைவருக்கும் தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.