தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழக வெற்றிக்கழக மாநாடு பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் தன்னார்வலர்கள்- விஜய் அறிவிப்பு

Published On 2024-10-15 06:15 GMT   |   Update On 2024-10-15 06:15 GMT
  • தனியார் பாதுகாப்புப் படை, காவல் துறை வழங்கியுள்ள நெறிமுறைகளை உள்ளடக்கித் தங்கள் பணிகளை மேற்கொள்வர்.
  • நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்குத் தேவையான ஒலி, ஒளி வடிவக் காணொலிக் காட்சிக்கான தயாரிப்பு பணிகளையும் மேற்கொள்வர்.

சென்னை:

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநாடு வருகிற 27-ந்தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி 85 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டு பந்தல் அமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மாநாட்டு பணிகளுக்காக வரவேற்பு குழு, உணவு, போக்குவரத்து குழு, வாகன நிறுத்த குழு உள்பட 27 சிறப்பு குழுவை கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்து உள்ளார்.

இந்த நிலையில் மாநாடு பணிகளுக்கென மேலும் 3 குழுக்களை விஜய் நியமனம் செய்துள்ளார். இது தொடர்பாக கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நம் கட்சி தலைவரின் அறிவுறுத்தலின்படி மாநில மாநாட்டின் பணிகளை மேற்கொள்ள, தொழில்நுட்ப பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை ஒருங்கிணைக்கும் குழு, தன்னார்வர்கள் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் காணொலிக் கண்காட்சி அமைப்புக் குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள் இருவரும் அடங்கிய சிறப்பு பிரிவு, மாநாட்டில் தலைவரின் பிரத்யேகப் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டு உள்ள தனியார் பாதுகாவல் படையினரை மேற்பார்வை செய்வர். இத்தனியார் பாதுகாப்புப் படை, காவல் துறை வழங்கியுள்ள நெறிமுறைகளை உள்ளடக்கித் தங்கள் பணிகளை மேற்கொள்வர்.

மேலும் இந்தக் குழுவின் தலைமை நிர்வாகிகள், முழு மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டுதலின் படி, தனியார் பாதுகாவல் படையின் உதவியுடன் வழி காட்டும் குழு, பாதுகாப்புக் குழு, போக்குவரத்துக் குழு, வாகன நிறுத்தக் குழு, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை, சீருடை அணிந்த தன்னார்வலர்கள் குழுக்கள் பலவற்றையும் ஒருங்கிணைத்து அவற்றிற்கான நெறிமுறைகளைச் செவ்வனே செயல்படுத்தும் கூடுதல் பணியினையும் ஆற்றுவர்.

கழக தலைமை நிலையச் செயலகத்தின் ஆலோசனை மறறும் வழிகாட்டுதலின்படி, நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்குத் தேவையான ஒலி, ஒளி வடிவக் காணொலிக் காட்சிக்கான தயாரிப்பு பணிகளையும் மேற்கொள்வர்.

இத்துடன் மாநிலம் முழுவதும் இருந்து மாநாட்டிற்கு வருகை தரும் கழக தோழர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவி புரியும் வகையில் சீருடை அணிந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்கும் பணிகளில் அதற்கென தனியாக அமைக்கப்பட்டிருக்கும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்புக் குழு ஈடுபடும்.

காணொலி கண்காட்சி அமைப்புக் குழுவானது தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியாகப் பரிணாமம் அடைவதற்கு முன்பு, ரசிகர் மன்றமாக இருந்து நற்பணி மன்றமாகி, பின்னர் தளபதி மக்கள் இயக்கமாக வளர்ந்து பல்லாண்டுகளாக தமிழக மக்களுக்கு உறுதுணையாக நின்று ஆற்றிய பல்வேறு நலத்திட்டப் பணிகள் குறித்த காணொலி கண்காட்சி அமைப்பதற்கான பணிகளை கவனிக்கும்.

தன்னர்வலர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நிரஞ்சனும் உறுப்பினர்களாக 101 பேரும் காணொலி கண்காட்சி அமைப்பு குழு தலைவராக வேல்முருகனும் 5 உறுப்பினர்களும் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் 90 உறுப்பினர்களும் செயல்பட இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News