தமிழ்நாடு (Tamil Nadu)

விவசாயத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது- வேல்முருகன்

Published On 2024-10-15 07:41 GMT   |   Update On 2024-10-15 07:41 GMT
  • பருவ மழை, பேரிடர் கால நிவாரண நிதிகளை மத்திய அரசு ஒருபோதும் தமிழகத்திற்கு வழங்கியது இல்லை.
  • ஜிஎஸ்டி வரி வசூலித்த தொகைகளை கூட வழங்கவில்லை.

தஞ்சாவூா்:

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை டெல்டா மாவட்டமாக அறிவிக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வரக்கூடாது.

ஓ.என்.ஜி.சி புதிய எண்ணெய் கிணறு தோண்ட கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 2018 ஆம் ஆண்டு அம்மாபேட்டை பஸ் நிலையம் முன்பு தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் மணியரசன் உள்ளிட்ட பலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் திருநாவுக்கரசு, திருமாவளவன், வேல்முருகன் , மணியரசன் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஒருங்கிணைந்த தஞ்சாவூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

வழக்கில் ஆஜராகி விட்டு வெளியே வந்த வேல்முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஓ.என்.ஜி.சி புதிய எண்ணெய் கிணறுகள் தோண்ட கூடாது என்பதை வலியுறுத்தி அம்மாபேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். இதற்கு அப்போதைய அ.தி.மு.க அரசு எங்கள் மீது வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் இன்று தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜரானேன். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கபட்டது. சம்மன் அனுப்பப்பட்டதால் நான் ஆஜர் ஆனேன்.

பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

மக்கள் பிரச்சனைக்காக போராடியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் 1000-க்கும் மேற்பட்ட வழக்குகளை திமுக அரசு திரும்ப பெற்றது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் பெய்த கனமழையில் 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கள்ளச்சாராய மரணத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. ஆனால் மின்கம்பம் சீரமைக்கும் பணியில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. மனித உயிர் விலை மதிக்க முடியாதது. நிவாரணம் என்பது ஒரே மாதிரியாக வகுக்க வேண்டும். குறைந்தது ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்து ஒரே மாதிரியாக வழங்க வேண்டும். இதில் பாகுபாடுக்கூடாது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் துரித நடவடிக்கை எடுக்க 15-க்கும் மேற்பட்ட அமைச்சசர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். எனவே நியமிக்கப்பட்ட அனைவரும் துரிதமாக பணி செய்து இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை காக்க வேண்டும்.

பருவ மழை, பேரிடர் கால நிவாரண நிதிகளை மத்திய அரசு ஒருபோதும் தமிழகத்திற்கு வழங்கியது இல்லை. ஜிஎஸ்டி வரி வசூலித்த தொகைகளை கூட வழங்கவில்லை. எனவே தமிழக அரசே உரிய நிதிகளை ஒதுக்கி வழங்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம், நீர்வளத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது. இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசால் தமிழ் ஈழ மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News