தமிழ்நாடு (Tamil Nadu)

சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ரெயிலில் 2 வயது பெண் குழந்தை மீட்பு

Published On 2024-09-23 08:16 GMT   |   Update On 2024-09-23 08:16 GMT
  • முன்பதிவு இல்லாத பெட்டியின் சீட்டில் 2 வயது பெண் குழந்தை ஒன்று தூங்கி கொண்டிருந்தது.
  • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கோவை:

சென்னையில் இருந்து கோவைக்கு சம்பவத்தன்று இரவு கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

ரெயிலில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், ஊழியர்கள் ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியின் சீட்டில் 2 வயது பெண் குழந்தை ஒன்று தூங்கி கொண்டிருந்தது.

இதை பார்த்ததும் ரெயில் பணியாளர்கள் அதிர்ச்சியாகினர். உடனடியாக இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் கஜேந்திரன், ரம்யா ஆகியோர் அங்கு சென்று பார்த்தனர்.

அங்கு குழந்தை தூங்கி கொண்டிருந்தது. அந்த குழந்தையை போலீசார் மீட்டனர்.

அந்த குழந்தையை ரெயிலில் அழைத்து வந்தது யார்? அதனுடைய தாய் யார்? என்பது தெரியவில்லை.

இதையடுத்து போலீசார் குழந்தையை குழந்தைகள் நல அலுவலர் மூலம் கிணத்துக்கடவு பகுதியில் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அந்த குழந்தையை ரெயிலில் பயணித்த பயணி மறந்து போய் விட்டு சென்றாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News