தமிழ்நாடு (Tamil Nadu)

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்

Published On 2024-10-22 01:49 GMT   |   Update On 2024-10-22 01:49 GMT
  • தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2023-2024-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வங்கி கணக்குகளில் போனஸ் தொகை வரவு வைக்கப்பட உள்ளது.

சென்னை:

தீபாவளி பண்டிகை இம்மாதம் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கு இன்னும் 8 நாட்களே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2023-2024-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் டாஸ்மாக் நிறுவன தலைமையகம், மண்டல - மாவட்ட அலுவலகங்கள், 4,829 கடைகளில் பணிபுரியும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள், அலுவலக உதவியாளர்கள், ஆவண கிளார்க்குகள் என மொத்தம் 25,824 பயன்பெறுகின்றனர். அதிகபட்சமாக தீபாவளி போனஸ் ரூ.16,800 வரை கிடைக்கும்.

மின்னணு முறையில் பணியாளர்களின் வங்கி கணக்குகளிலேயே நேரடியாக பணம் வரவு வைக்கப்பட இருப்பதால், அதற்கான பட்டியலை மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், டெப்போ மேலாளர்கள் தனித்தனியாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நேற்று மாலைக்குள் அனுப்பிவைக்க கோரப்பட்டிருந்தார்கள்.

அதன்படி, அனைத்து அதிகாரிகளும் நேற்று மாலை இ-மெயில் மூலம் அனுப்பியதை தொடர்ந்து, டாஸ்மாக் பணியாளர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) போனஸ் வழங்கப்பட இருக்கிறது. அவர்களின் வங்கி கணக்குகளில் போனஸ் தொகை வரவு வைக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News