தமிழ்நாடு (Tamil Nadu)

2,500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச் சோளப் பயிர்கள் டிராக்டர் ஓட்டி அழிக்கும் விவசாயிகள்

Published On 2024-09-28 06:02 GMT   |   Update On 2024-09-28 06:14 GMT
  • மழையை மட்டுமே நம்பி பாசனம் செய்யும் மானாவாரி விவசாயிகள், தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • மழை இல்லாததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

பெரம்பலூர்:

மக்காச்சோள பயிரை அனைத்து விதமான மண்ணிலும் சாகுபடி செய்வதோடு, ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நெல் பயிருடன் ஒப்பிடும்போது குறைந்த சாகுபடி செலவே. மேலும், இந்தப் பயிரில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இருக்காது.

கோழிப் பண்ணை, கால்நடைத் தீவனங்களுக்கு மிக முக்கிய உணவாக மக்காச்சோளம் தேவைப்படுவதால், தமிழகத்தில், தற்போது மக்காச்சோளத்துக்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது. இதை கருத்தில்கொண்டு ஆற்றுப்பாசனம் இல்லாதபோதிலும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றனர்.

இங்குள்ள 90 சதவீத விவசாயிகள் மானாவாரி சாகுபடியை நம்பியே உள்ளனர். இந்த மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்ட ஆடிப்பட்டத்தில் 1.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.

விதைத்து 2 மாதம் ஆகிய பயிர்கள் 2 அடி உயரம்வரை வளர்ந்து விட்டன. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போதிய மழை பெய்யாததாலும், வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருந்த காரணத்தாலும் கடந்த ஓரிரு வாரங்களாக மக்காச்சோளப் பயிர்கள் கருகத் தொடங்கின.

இதனால் கவலையடைந்த விவசாயிகள் இனிமேல் மழை பெய்தாலும் மக்காச்சோளப் பயிரைக் காப்பாற்ற முடியாது எனும் சூழலில் வயல்களில் டிராக்டரை உழவு ஓட்டி மக்காச்சோளப் பயிர்களை அழித்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயி ஒவர் கூறும்போது,

கை.களத்தூர், காரியனூர், நெற்குணம், பாதாங்கி, மரவநத்தம், பசும்பலூர் உள்ளிட்ட கிராமங்களில் 2,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச் சோளப் பயிர்கள் இவ்வாறு உழவு ஓட்டி அழிக்கப்பட்டன.

மழையை மட்டுமே நம்பி பாசனம் செய்யும் மானாவாரி விவசாயிகள், தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், மழை இல்லாததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News