தமிழ்நாடு (Tamil Nadu)

தெர்மோகோல் ஆராய்ச்சியில் இருந்தவர் ஆலோசனை சொல்கிறார்... செல்லூர் ராஜூ கருத்துக்கு அமர் பிரசாத் ரெட்டி பதிலடி

Published On 2023-03-09 12:35 GMT   |   Update On 2023-03-09 12:41 GMT
  • பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது என செல்லூர் ராஜூ கருத்து
  • செல்லூர் ராஜூ தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது என அமர் பிரசாத் ரெட்டி பதில்

சென்னை:

பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்றும் அண்ணாமலை கூறினார்.

பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாயடக்கம் தேவை, வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆளும் திமிரோடு பேசக்கூடாது என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி. "இத்தனை நாட்கள் தெர்மோகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.க.வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது", என அமர் பிரசாத் ரெட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், செல்லூர் ராஜூ அமைச்சராக இருந்தபோது வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க, தெர்மோகோல் மிதக்கவிட்ட படத்தையும் அமர் பிரசாத் ரெட்டி பகிர்ந்துள்ளார்.

Tags:    

Similar News