தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

Published On 2024-09-08 04:58 GMT   |   Update On 2024-09-08 04:58 GMT
  • மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.

இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்க தலைவர் சரவணன் அளித்த புகாரில் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் மட்டுமே பேசினேன். ஆனால் எனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று போலீசாரிடம் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News