தமிழ்நாடு (Tamil Nadu)

பள்ளிகளை மாதந்தோறும் ஆய்வு செய்ய 30 கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்- பள்ளிக்கல்வித்துறை அதிரடி

Published On 2024-09-22 04:23 GMT   |   Update On 2024-09-22 04:23 GMT
  • ஆய்வின்போது கண்காணிப்பு அதிகாரிகள் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களிடம் சனிக்கிழமை நாட்களில் குறைகளை கேட்டறியலாம்.
  • பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., எஸ்.ஜி.சி., ஜெ.ஆர்.சி குறித்து ஆய்வுகள் செய்ய வேண்டும்.

சென்னை:

திருவள்ளூர் பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், மாணவர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இப்படி, மற்ற பள்ளிகளில் நடந்த ஆய்வுகள் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், பள்ளிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் 30 பேர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள், பள்ளிகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குனர் சங்கர் புதுக்கோட்டை மாவட்டத்திலும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி செங்கல்பட்டு மாவட்டத்திலும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மதுரை மாவட்டத்திலும், தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் திருவள்ளூர் மாவட்டத்திலும் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் உள்பட 30 அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். மாதத்தில் ஒருமுறையாவது பள்ளிகளில் ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை மாதத் தொடக்கத்தில் 5-ந் தேதிக்குள் தவறாமல் அரசுக்கு சமர்பிக்க வேண்டும்.

ஆய்வின்போது கண்காணிப்பு அதிகாரிகள் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களிடம் சனிக்கிழமை நாட்களில் குறைகளை கேட்டறியலாம். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம், அனைத்து மாணவர்களின் நலவாழ்வு திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல், மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்களின் வருகை பதிவேடு விவரங்கள் முறையாக கண்காணிக்கப்படுகிறா? என்பது குறித்தும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வி செயல்பாடுகள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் காலிப்பணியிட விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களின் விளையாட்டு திறன்கள் குறித்தும், கல்வி உதவித்தொகைகள் குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., எஸ்.ஜி.சி., ஜெ.ஆர்.சி குறித்து ஆய்வுகள் செய்ய வேண்டும். மாணவர்களுக்கான 14417, 1098 ஆகிய உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் ஆய்வுகள் நடத்த வேண்டும். அங்கு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்த விவரங்களை சோதனை செய்ய வேண்டும். தணிக்கை விவரங்களையும் ஆராயவேண்டும். வட்டார கல்வி அலுவலகங்களில் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை விவரங்களை பரிசோதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News