தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- இயக்குநர் நெல்சனிடம் போலீசார் விசாரணை

Published On 2024-08-24 06:36 GMT   |   Update On 2024-08-24 06:36 GMT
  • சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • இயக்குநர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதில் சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர் மலேசியா தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த பலரையும் போலீசார் அடுத்தடுத்து விசாரித்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு சென்னை போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஏற்கனவே சம்போ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி வழக்கறிஞர் மோனிஷாவிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மொட்டை கிருஷ்ணனும் இயக்குநர் நெல்சனின் மனைவியும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள் என்பதால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மொட்டை கிருஷ்ணனுடன் இயக்குநர் நெல்சன் மனைவி தொடர்ந்து செல்போனில் பேசிவந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி மொட்டை கிருஷ்ணன் குறித்து திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் அடையாறில் உள்ள நெல்சன் வீட்டிற்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குநர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News