தமிழ்நாடு (Tamil Nadu)

விமான சாகச நிகழ்ச்சி: மெரினா செல்லாதவர்கள், மொபைலிலும் பார்க்கலாம்.. எப்படி?

Published On 2024-10-06 05:02 GMT   |   Update On 2024-10-06 05:07 GMT
  • விமானப்படை சாகச நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
  • பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஏராளமானோர் மெரினா நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலையில் இருந்து திரளானவர்கள் மெரினாவில் குவிந்துள்ள நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண நேரில் செல்ல முடியாதவர்கள் அவரவர் இருந்த இடத்தில் நேரலையில், விமான சாகச நிகழ்சிசைய காண ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி மக்கள் இந்திய வான்படையின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் விமான சாகச நிகழ்ச்சியை நேரலையில் கண்டுகளிக்க முடியும். இதுதவிர தூர்தர்ஷன் நேஷனல் மற்றும் தூர்தர்ஷன் தமிழ் தொலைகாட்சிகளிலும் நேரலை செய்யப்படுகிறது.

மெரினாவில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

இதுதவிர சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார். விமான சாகச நிகழ்ச்சியைக் காண சுமார் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்கள் வருகையை ஒட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்து இருக்கிறது. விமானப்படை சாகச நிகழ்ச்சியை ஓட்டி 6 ஆயிரத்து 500 காவல் துறையினர், 1500 ஊர்காவல் படையினர் உள்பட மொத்தம் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Tags:    

Similar News