தமிழ்நாடு

பார்முலா 4 கார் பந்தயம்- இன்று முதல் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

Published On 2024-08-30 02:03 GMT   |   Update On 2024-08-30 02:03 GMT
  • சிவானந்த சாலை மற்றும் கொடி மரச்சாலை முற்றிலும் மூடப்படும்.
  • காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை.

சென்னை:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் (ஆன் ஸ்ட்ரீட் நைட் பார்முலா-4) சென்னையில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. சென்னை தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை 3.5 கி.மீ. சுற்றளவில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாலைகளில் இன்று (வெள்ளிக்கிழமை) போட்டிக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே இந்த சாலைகளில் இன்று முதல் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்டிரல் ரெயில் நிலையம், ஈ.வெ.ரா.சாலை வழியாக சென்றடையலாம்.

* அண்ணா சாலையில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்டிரல் ரெயில் நிலையம் நோக்கி திருப்பி விடப்படும்.

* சிவானந்த சாலை மற்றும் கொடி மரச்சாலை முற்றிலும் மூடப்படும்.

* காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை.

* சென்டிரலில் இருந்து அண்ணாசிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

* முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக பல்லவன் சாலை, ஈ.வெ.ரா.சாலை, சென்டிரல் ரெயில் நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் சாலை வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்

* கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வெ.ரா.சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்துசாமி பாயிண்ட், பாரிமுனை ஆகிய சாலைகளில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்வதற்கு தற்காலிக தடை அமலில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News