தீவிர புயலாக வலுப்பெற்ற மிச்சாங் புயல்
- நாளை வடதமிழக கடலோர பகுதிகளை மிச்சாங் புயல் நெருங்கும்.
- புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிச்சாங் புயலாக உருவானது. சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிச்சாங் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
நாளை வடதமிழக கடலோர பகுதிகளை மிச்சாங் புயல் நெருங்கும். மாலை 5 மணிக்கு மேல் தரைக்காற்று அதிகளவு வீசக்கூடும்.
நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே வருகிற 5ந்தேதி முற்பகல் புயல் கரையை கடக்கும்.
மிச்சாங் புயலை எதிர்கொள்ள முப்பது கப்பல்களுடன் கடலோர காவல் படையினர் தயார் நிலையில் உள்ளனர். புயலையொட்டி இரவு நேரத்திலும் கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவர். 8 கப்பல்கள் தொடர் ரோந்து பணியிலும், 10க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளன.
புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் விரைவாக கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.